#Breaking ஒற்றைத் தலைமையை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு - "பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும்" என எச்சரிக்கை!!
அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டமானது வருகிற 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒற்றை தலைமை கூறி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக உள்ள நிலையில் கட்சியில் ஒற்றை தலைமையை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என பல மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் தனித்தனியே அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.முன்னாள் அமைச்சர் சிவபதி ஒற்றை தலைமை முடிவை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் . இளைஞரணி சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒற்றை தலைமை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தை தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோர் இன்று சந்தித்தனர். சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த தம்பிதுரை, செங்கோட்டையனிடம் ஓபிஎஸ் திட்டவட்டமாக இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது . இரட்டை தலைமை நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்தால் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க நேரிடும் என பன்னீர்செல்வம் கூறியதாகவும் தெரிகிறது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.