ஓபிஎஸ் சகோதரர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - நேற்று சசிகலாவை சந்தித்த நிலையில் இன்று நீக்கப்படுவதாக அறிவிப்பு..
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்த நிலையில், இன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. அதேநேரம் கட்சிக்குள்ளிருந்து எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன. 2 தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் புத்திச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமைப்புச் செயலாளரும் , முன்னாள் தொலிலாளார் நலத்துறை அமைச்சருமான செல்லபாண்டியன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வியில் இருந்து மீண்டெழவும், கட்சித் தலைமையை பலப்படுத்தவுமே இந்த முடிவு எடுப்பதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் விளக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவ் அரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்தச் சூழலில் தென் மாவட்டங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றிருந்த சசிகலாவை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேற்று சந்தித்து பேசினார். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஒரு சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில், ஓ.ராஜா சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். ஓ.ராஜா உள்ளிட்ட எஸ்.முருகேசன், வைகை கருப்புஜி, எஸ். சேதுபதி ஆகியோர் கட்சிக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தலைமைக் கழகம் அறிவித்திருக்கிறது. கழக நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/XChC2KxGmf
— AIADMK (@AIADMKOfficial) March 5, 2022