#Breaking : 10% இட ஒதுக்கீடு விவகாரம் : மௌனம் சாதிக்கும் இபிஎஸ்.. அதிரடி முடிவெடுத்த ஓபிஎஸ்..
10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 % இட ஒதுக்கீடு செல்லும் என கடந்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் தீப்பளித்தனர். இதனையடுத்து அமைச்சர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, கடந்த 12ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது. அப்போது, தமிழக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது பற்றி விமர்சிக்கப்பட்டது. 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான எம்ஜிஆர், ஜெயலலிதா நிலைப்பாட்டிற்கு எதிராக அதிமுக நடப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அதிமுக குரல் கொடுக்க வேண்டும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் , அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கருத்து கூறாமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் நிலையில், ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..