"காலை கூட்டம் புறக்கணிப்பு... மதியம் அரசுக்கு ஆதரவு" - அந்தர் பல்டி அடித்த அதிமுக!
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் தவிர்த்து அனைத்து கட்சி உறுப்பினர்களின் சம்மத்ததுடன் ஒருமனதாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியும் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக உறுப்பினர்களும் மசோதா நிறைவேற முழு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டார்.
அரசு சார்பில் பல முறை வலியுறுத்தியும் அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை. அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவிடம் சந்தித்து பேசினர். இக்குழுவில் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனும் இடம்பெற்றிருந்தார். இச்சூழலில் பிப்ரவரி 3ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பியனுப்பினார். ஏழை மாணவர்களுக்கும் சமூக நீதிக்கும் எதிராக நீட் விலக்கு மசோதா இருப்பதால் திருப்பியனுப்புவதாக விளக்கமும் அளித்தார்.
"ஆட்டுக்கு தாடியும், நாட்டிற்கு ஆளுநரும் தேவையா” என ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து கேள்வியெழுப்பிய பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளில் மசோதா திருப்பியனுப்பப்பட்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இச்சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதனை பாஜக புறக்கணித்தது. அதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதிமுகவும் புறக்கணித்தது தான் பெரும் பேசுபொருளானது.
கடந்த அதிமுக ஆட்சியில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனை குடியரசுத்தலைவர் மீண்டும் அரசுக்கே திருப்பியனுப்பினார். அப்போது அதிமுக அரசுக்கு எதிராக திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தை அதிமுக புறக்கணித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதிமுக பங்கேற்காதது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இச்சூழலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் விளக்கமளித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "'நீட் தேர்வு ரத்து குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதிமுகவை பொறுத்தவரை 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, 'நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, விமர்சனம் எழுந்ததும் அந்தர் பல்டி அடித்ததாக நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.