தமிழகத்திலும் பரவியது ஒமைக்ரான் பிஏ 4 வகை கொரோனா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்..
ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பிஏ 4 (BA4)கொரோனா வகை தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள ஒருவருக்கு ஓமிக்ரான் பிஏ4 வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அந்த நபர் நலமுடன் இருப்பதாக தெரிவித்த அவர், முதலில் தாயாருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர் இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் உருமாறிய ஓமிக்ரான் வகை தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக கூறினார். அதில் தாயார் ஓமிக்ரான் பிஏ 2 (BA2 ) வைரஸும், மகள் ஓமிக்ரான் பிஏ 4 வைரசஸாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பிஏ 4 வகை தொற்று கண்டறியப்பட்ட மகள் குணமடைந்துவிட்டதாகவும், மேலும் அவருடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட 4 வகையான பெருந்தொற்று பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், புதிய வகை கொரோனா பரவும் தன்மை கொண்டிருக்கவில்லை என்றார். ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட பிஏ 4 வகை கொரோனா முதன்முறையாக தமிழகத்திலும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் இந்த ஓமிக்ரான் பிஏ 4 வகை வைரஸ் பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தும் என்று தெரிவித்தார்..