தமிழகத்தில் இன்று இரவு வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் அதி கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புயல் வீசும் என்பதால் இன்று இரவு பேருந்து சேவை அளிக்கக்கூடாது என்றும் பேருந்து நிலையங்களில் கூட்டமாக மக்கள் யாரும் நிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த ஆறு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.