கலைஞர் அறக்கட்டளை சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கிய ஸ்டாலின்..
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், கல்வி உதவி நிதியாக மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தந்த ரூ. 5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டியில் மாதம்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகையாக 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த 5 கோடி ரூபாயில், கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.4 கோடியில் இருந்து கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022 ஜனவரி மாதம் கிடைத்த வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 2 லட்சத்தை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் நேற்று (06.02.2022) வழங்கினார். நிதி பெறுவோர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அந்த தொகை அனுப்பப்படுவதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.