தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 51 பேருக்கு விருது.. - முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்..
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைக்கு சார்பில் 51 பேருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளில் தமிழ்ச்செம்மல் விருது , தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம் 38 தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தமிழக அரசின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் தமிழ்ச்செம்மல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு 51 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.
செங்கல்பட்டை சேர்ந்த எழுத்தாளர் சுப்பிரமணியன் உள்பட மாவட்டத்துக்கு ஒருவர் விதம் 38 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட இருக்கிறது. அந்தவகையில், புதுக்கோட்டையை சேர்ந்த மறைந்த தமிழறிஞர் வீ.கே.கஸ்தூரிநாதனுக்கு தமிழ்ச்செம்மல் விருதும், குழந்தை எழுத்தாளர் செ.சுகுமாரன் உட்பட 10 பேருக்கு 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், 2021-ம் ஆண்டுக்கான மதுரை உலகத் தமிழ்சங்க விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். மேலும், கனடாவை சேர்ந்த முனைவர் பாலசுந்தரத்துக்கு இலக்கிய விருதும், மலேசியாவை சேர்ந்த மனோன்மணி தேவிக்கு இலக்கண விருதும், சியோஸ் கொரியாவை சேர்ந்த முனைவர் சே.ஆரோக்யராஜுக்கு மொழியியல் விருதும் வழங்கப்படுகிறது. நாட்டுடுமையாக்கப்பட்ட தமிழறிஞர்கள் 8 பேரின் நூல்களுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையையும் முதல்வர் வழங்கினார்.