தீபாவளியையொட்டி 2 நாட்களில் ரூ. 464 கோடிக்கு மதுவிற்பனை.. மதுரையில் மட்டும் ...
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் கிடைக்கும்.. இதன் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11% அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.
பொதுவாகவே தமிழகம் முழுவதும் சனிக்கிழமை விடுமுறை நாளன்று சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும். அத்துடன் கடந்தாண்டு தீபாவளியின் போது நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ( 23-ம் தேதி) சென்னை-ரூ. 51.52 கோடி, திருச்சி - ரூ. 50.66 கோடி, சேலம் ரூ. 52.36 கோடி, மதுரை ரூ. 55.78 கோடி, கோவை-ரூ. 48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது.
சனிக்கிழமையான நேற்று முன்தினம்(அக்.22) சென்னை-ரூ. 38.64 கோடி, திருச்சி - ரூ. 41.36 கோடி, சேலம் - ரூ. 40.82 கோடி, மதுரை ரூ. 45.26 கோடி, கோவை ரூ. 39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மொத்தமாக இந்த இரண்டு நாட்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. இன்று தீபாவளி பண்டிகை என்பதால் மேலும் மது விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.