புத்தக கண்காட்சிக்கு ரூ.10 கொடுத்தால் ஆன்லைன் டிக்கெட்... விற்பனை தேதி அறிவிப்பு!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் (பபாசி) ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வார்கள். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் புத்தக கண்காட்சி நடைபெற்று வந்தது.
இந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் 45ஆவது புத்தக கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் பரவல் உச்சம் பெற்றதால் புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தற்போது ஒமைக்ரான் பரவல் குறைந்துவிட்டதால் பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புத்தக கண்காட்சிக்கும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகமல் தேங்கிக் கிடப்பதாக பபாசி துணைத் தலைவர் மயில்வேலன் அரசிடம் வருத்தம் தெரிவித்தார்.
இதன் பிறகே அரசு அனுமதி வழங்கியது. அதன்படி பிப்.16 தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் , கைக்குழந்தைகளுடன் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவுச் சீட்டு பெறலாம் எனவும் கூறியிருந்தது. அந்த வகையில் இதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கிறது. பபாசி இணையதளத்தில் சென்று ரூ.10 ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை பெறலாம். 500 பதிப்பாளர்களுடன் 800 அரங்குகளில் நடைபெறும் புத்தக கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கவிருக்கிறார்.