நீட் தேர்வை ரத்து செய்தார்களா? விழி பிதுங்கி நிற்கிறது திமுக அரசு - ஈபிஎஸ் தாக்கு!!
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை தான் திமுக தொடர்கிறது என்று ஈபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூடாது என உத்தரவாதம் அளித்துள்ளோம். சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது; அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை தான் திமுக தொடர்கிறது. எந்த புதிய, பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மின் கட்டணம், சொத்து வரி உயர்வை மக்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் அனுபவித்து உள்ளார்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். என்ன ஆனாது? மக்களை ஏமாற்றுகின்றனர் திமுக. காவிரி பிரச்னையின் போது அதிமுக சுமார் 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினோம். தமிழ்நாடு மக்களுக்கான குரல் கொடுத்தோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சி அமைந்தது முதல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்குமே தெரியும். திமுக அரசு அமைந்த பிறகு ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து பணிகள் நடைபெற்று வருகிறது என்றால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் பணிகள் முடிக்கப்பட்டது. அதை திறந்து வைத்தார்கள் . அதேபோல சட்ட கல்லூரி பணிகள் முடிக்கப்பட்டது அதை திறந்து விட்டார்கள். இதுபோல் இன்னும் பல்வேறு பணிகள் அதிமுக ஆட்சியில் முடிவுற்ற பணிகளை எல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவையில் சுமார் 48 கோடியில் 133 பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு கிட்டத்தட்ட 11 முறை தள்ளி வைத்துள்ளனர். அதேபோல் தமிழக முழுவதும் மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி, ஒன்றியம், கிராமங்கள் வரை வளர்ச்சி பணிகள் எல்லாம் முடங்கி கிடக்கிறது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அரசு 2021 தேர்தலின்போது கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை . இதனால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் என்றார்.