பெட்ரோல் குண்டு வீச்சு - அஜித் ரசிகர் கைது
வலிமை படம் வெளியிடப்பட்டிருந்த கோவை தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதாக அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி அன்று திரைக்கு வந்தது. அன்றைய தினம் 4:30 மணிக்கு கோவை கற்பகம் தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது ரசிகர் நவீன்குமார் பிளக்ஸ் பேனர் வைத்திருக்கிறார்.
கற்பகம் காம்ப்ளக்ஸ் தியேட்டர் வளாகத்தில் நவீன்குமார் பிளக்ஸ் பேனர் அமைத்துக்கொண்டிருந்த சமயம் பைக்கில் வந்த 2 பேர் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதில் நவீன்குமாருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன்(20) கோவையில் வசித்து வருகிறார் என்பதும், அஜித் ரசிகரான அவர் நண்பர்களுடன் வலிமை படம் பார்க்க தியேட்டருக்கு சென்றிருக்கிறார் . அங்கிருந்த நவீன்குமார் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி டிக்கெட்டை 1,500 ரூபாய் வீதம் விற்று இருக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் அவரது நண்பர்கள் நான்கு பேர் கூட்டு சேர்ந்துகொண்டு நவீன்குமாரிடம் சென்று வாக்குவாதம் செய்து விட்டு திரும்பியுள்ளனர்.
அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத்தான் நவீன்குமார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. இதில் லட்சுமணன் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற நான்கு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.