ரேஷன் கடைகளில் இணைய சேவை - விரைவில் செயல்படுத்த திட்டம்..
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு பி.எம் வாணி எனும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி இணையதள சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் இடத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரேஷன் கடைகள் அமைந்திருக்கிறது. இதில் பி.எம் வாணி திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகளை , இணைய சேவை வழங்கும் பொது தரப்பு மையமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கடந்த மே மாதம், கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனையடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, தற்போது அரசுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வைபை வசதி ஏற்படுத்தி அந்த கடைக்கு அருகில் வசிப்போருக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் செல்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை எடுத்து வந்து இணைய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம் ரேஷன் கடைகளில் வைஃபை பயன்படுத்துவோர் , இதற்காக ரேஷன் கடைகளுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். இதன்மூலம் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கும் வருவாய் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதிக இடவசதியுடன், சொந்த கட்டிடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் முதல்கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு துறை தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.