ஓ.பி.எஸ்.,தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகம் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு

 
op

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் அதே வேளையில்  ஓபிஎஸ், தனது  ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். இதனால் அங்கு  ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதனையடுத்து  வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர்.  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இருதரப்பும் நீதிமன்றத்தை நாடின. பின்னர் அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றுமாறும், அதன் சாவியை பழனிசாமியிடம் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  

admk

இந்த விவகாரங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்லாமல் இருந்தனர்.  இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார்.  இந்த நிலையில் பன்னீர் செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக  அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்திருக்கிறார்.    ஓ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் நேற்று மனு அளித்தார். 

eps

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓ.பி.எஸ். தரப்பினர் மீண்டும் அங்கு செல்வதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய சூழலில் நீங்கள் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சீலை உடனடியாக அகற்றி அலுவலக சாவியை எடப்பாடிபழனி சாமி தரப்பினரிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வசமே இருந்து வருகிறது.   இதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதையே கோர்ட்டு உறுதி செய்துள்ளது. உங்கள் தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று கோர்ட்டிலோ, அல்லது வருவாய் அதிகாரியிடமோ அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.