கர்ப்பிணி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்!!

 
tn

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கல்லுசிறுநாகலூரை சேர்ந்தவர் உமா பார்வதி.  இவருக்கு கடந்த  2012 ஆம் ஆண்டு கூலி தொழிலாளி சிலம்பரசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் பொருட்களை மணமகள் வீட்டார் கொடுத்துள்ளனர்.  திருமணமான மூன்று மாதங்களிலேயே சிலம்பரசன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் . அதன்பிறகு 7 மாத கர்ப்பிணியாக இருந்த உமா பார்வதியிடம்  திருமணத்தின்போது தருவதாக கூறிய மேலும் 5 பவுன் நகையை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.  இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.  இந்த விவகாரம் உமா பார்வதியின் வீட்டுக்கு தெரிய வர வளைகாப்பின்  போது தருவதாக வாக்களித்துள்ளனர்.

tn

ஆனால் அதன் பிறகும் உமா பார்வதியின்  அவரது கணவர் சிலம்பரசன் தொடர்ந்து துன்புறுத்தி வந்த காரணத்தினால்,  2014ஆம் ஆண்டு அவர் அதே கிராமத்தில் உள்ள தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  அத்துடன் இந்த விவகாரத்தில் சிலம்பரசன் ,அவரது தந்தை ஏழுமலை ,தாய் கலியம்மாள்,  உறவினர் முனுசாமி ஆகியோரை கைது செய்ததுடன், இவ்வழக்கு  விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

tn

 இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட சிலம்பரசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.  அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் . ஏழுமலை, கலியம்மாள்,  உறவினர் முனுசாமி ஆகிய 3 பேருக்கும் இவ்வழக்கில் இருந்து விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தண்டனை விதிக்கப்பட்ட சிலம்பரசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.