புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..
புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திர தின பவள விழாவை கொண்டாடி வருகிறது. 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றினார். அதேபோல் மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசியக்கொடியை ஏற்றினர். அந்தவகையில் புதுச்சேரியில் , முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து சுதந்திர தின விழாவில் அம்மாநில மக்களுக்கு உரையாற்றிய அவர், “வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக ரூ.19.40 கோடி வழங்கப்பட்டுள்ள என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாதாந்திர நிதியுதவியாக ரூ.500 உயரத்தி வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். புதுச்சேரி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்ய தமிழகத்திலிருந்து 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.425 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கவும் மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.