ஜாமீனில் எடுக்காததால் விரக்தி..பல்லியை சாப்பிட்ட கைதி!!
சேலம் மத்திய சிறையில் கைதி ஒருவர் பல்லி சாப்பிட்ட நிலையில் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் முகமது சதாம். இவர் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட முகமது சதாம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து குற்றவாளி முகமது சதாமை அவரது பெற்றோர் நேரில் வந்து சந்திக்கவும் இல்லை; அவரை ஜாமீன் எடுக்கவும் முன்வரவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் மத்திய சிறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சுவரிலிருந்த பல்லியை பிடித்து சாப்பிட்டுள்ளார்.
இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது முகமது சதாமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யாரும் தன்னை ஜாமீனில் எடுக்க முன்வராத காரணத்தினால் கைதி ஒருவர் பல்லியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மற்ற சிறைக்கைதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.