"புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயன்றால் மக்களை திரட்டி போராட்டம்" - அன்புமணி எச்சரிக்கை!!

 
sand

புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயன்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும், சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளது.

sand

தமிழக அரசின் இந்த நடவடிக்கை சரி செய்ய முடியாத சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்திவிடும். தமிழ்நாட்டில் தற்போது 25-க்கும் கூடுதலான மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில் இருந்து ஒரு நாளைக்கு அதிகாரப்பூர்வமாக 13 ஆயிரம் சரக்குந்து லோடு ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இவை தவிர்த்து எந்தக் கணக்கிலும் வராமல் பெருமளவில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால், இவை போதுமானவையாக இல்லை என்று கூறி கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே மாட்டு வண்டிகளில் மட்டும் மனித சக்தியைக் கொண்டு மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட 30 மணல் குவாரிகளில் எந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளவும் அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் நீர்வளத் துறை கடந்த 6 மாதங்களில் விண்ணப்பம் செய்துள்ளது.

pmk

தமிழக அரசு நீர்வளத்துறையின் இந்த முயற்சி மிகவும் ஆபத்தானது. எடுத்துக் காட்டாக அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் வெள்ளாற்றில் 8 இடங்களில் எந்திரம் மூலம் மணல் அள்ள அரசு திட்டமிட்டிருக்கிறது. செந்துறை வட்டத்தில் வெள்ளாறு மொத்தமே 8 கி.மீ.க்கும் குறைவான தொலை தான் பாய்கிறது. அந்த தொலைவுக்குள், அதாவது ஒரு கி.மீ.க்கும் குறைவான தூரத்திற்குள் ஒரு குவாரி அமைக்கப்பட்டால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களிலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர், கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஆகிய வட்டங்களில் காவிரி ஆற்றில் 8 இடங்களிலும் எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளக்கூடிய வகையில் குவாரிகளை அமைப்பதும் அதே போன்று பாதிப்புகளை ஏற்படுத்தும்.

sand theft

எனவே, தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளை திறப்பது, எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ள அனுமதிப்பது போன்ற முடிவுகளை தமிழக அரசு கைவிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். மாறாக, புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயன்றால் அவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி பாமக சார்பில் மாபெரும் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.