"9,981 அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை" - அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் வரும் 20-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. http://tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணையப் பக்கத்தின் மூலம் தரவரிசைப் பட்டியலைத் தெரிந்துகொள்ளலாம். கடந்த ஆண்டை விட 36 ஆயிரத்து 975 பேர் அதிகமாக இம்முறை விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக கட்டணம் செலுத்திய 1.58 லட்சம் பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ,வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் வரும் 19-ம் தேதிக்குள் TNEA Seva Centre-ல் குறைகளை பதிவு செய்யலாம்.குறைகள் நியாயமாக இருப்பின், உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசுப்பள்ளி மாணவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம்; 18004250110 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம். பொறியியல் படிப்புகளில் 9981 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம், முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைப்பு, மாற்று தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.