இனி தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

 
பள்ளிக்கல்வித்துறை

அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்தபடி நூதன தண்டனைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை  அறிவுறுத்தியுள்ளது.
 
 தமிழகத்தில் கோரொனா ஊரடங்கிற்குப் பிறகு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு  பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட வருகின்றன.  பாடம் கற்றுக்கொள்வதில் இருந்து தங்களை திருப்பி, மாணவர்கள் குறும்புச் செயல்களில் ஈடுபவது வழக்கம் தான்.  ஆனால் இதனை ஆசிரியர்கள் கண்டிக்கும் போது,  மாணவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளை எடுப்பது,  கோபம் வன்முறையை வெளிப்படுத்துவது, ஆசிரியர்களை அவமரியாதையாக நடத்துவது,   பொது சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.  இதுபோன்ற மாணவர்களை கவனமாக  கையாள வேண்டும் எனவும்,  அதற்கான சில பரிந்துரைகளையும்  தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வழங்கியுள்ளது.

வேலூரில் மேசையை உடைத்த பள்ளி மாணவர்கள் 10 பேர் சஸ்பெண்ட்- ஆட்சியர் உத்தரவு..

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்  பள்ளிக்கல்வி இணை இயக்குநர்  அனுப்பியுள்ள உத்தரவில், “பள்ளி மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ள குழந்தையாக இருந்தால், சிறப்பு கல்வியாளரிடம் அனுப்பி குழந்தைக்கு உதவி செய்யலாம். தற்போதுள்ள குழந்தைகள் ஆசிரியர்களை அவமதித்தல், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், சக மாணவர்களை ராகிங் செய்து அடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல், பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை, படங்களை எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நேர்வுகளில் முதலில் பள்ளி ஆலோசகர் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள்

அதே மாணவர் தொடர்ந்து தவறு செய்தால், திருக்குறளை படித்து பொருளுடன் எழுதுதல், நீதிக்கதை கூறுதல், செய்தி துணுக்குகளை படித்தல், வரலாற்று தலைவர்களை பற்றி எடுத்துரைத்தல், நல்ல பழக்க வழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி, 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் வரைதல், காய்கறி தோட்டம் அமைத்தல், கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். அதன் பின்னரும் தவறு செய்யும் பட்சத்தில் குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கவும், தொடர்ந்து அருகில் உள்ள வேறு அரசுப்பள்ளிக்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.