ஊர்வலத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு - உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு

 
high court

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்,  மாநகர காவல் ஆணையர்கள்  அனுமதி மறுத்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி தர இயலாது என  காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

rss class

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு  காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில்,  மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை தடை  செய்துள்ளதால் , இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மற்றும்  தொடர் வெடிகுண்டு வீச்சு   சம்பவங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஓர் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.   இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரனை நடத்தினால் அதில் அசம்பாவிதங்கள் ஏதும் நேர வாய்ப்பு இருப்பதாகவும் , ஆகையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்துள்ள புதிய மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.