தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை - ராதாகிருஷ்ணன்

 
Radhakrishnan

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதியதாக  அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவை பார்வையிட்டு, இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்து அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண்ணன், தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளது என்றும், இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். தடுப்பூசி அதிகம் செலுத்திக் கொண்டதால் நோய்எதிர்ப்பு அதிகரித்து உள்ளதாகவும்,  இருந்தாலும் கவனக் குறைவாக இருக்க கூடாது எனவும் கூறினார். 

radhakrishnan

வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும் எனவும், ஏதேனும் உடலில் நோய் தொற்று அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்நோய் பதிவாகவில்லை என்றாலும்,  இந்நோய் குறித்த கண்காணிப்பு தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.  திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு விமான நிலையங்களில் குரங்கம்மை நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.