தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வருகிற 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.