ராஜாஜியின் சிறப்பு புகைப்படக் கண்காட்சி திறப்பு..
ராஜாஜி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், சிறப்பு புகைப்படக் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது.
மூதறிஞர் இராஜாஜி அவர்களின் 50-வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் ம.சுப்பிரமணியன் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் 25.12.2022 முதல் 01.01.2023 அன்று வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.