முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் : அமைச்சர் மா.சு வெளியிட்டார்..

 
மா சுப்பிரமணியன்

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.  

முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வரவேற்கப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று அதற்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டார்.. 23 அரசு கல்லூரிகள் மற்றும் 16 சுயநிதி கல்லூரிகளில் உள்ள  2,346 இடங்களுக்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.  
  நர்சிங் , மருத்துவ மாணவர்கள்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அரசு கல்லூரியில் 1,162 இடங்களும்,  நிகர் நிலை கல்லூரிகளில் 763 இடங்களும்,  பல் மருத்துவத்திற்கான முதுநிலை அரசு இடங்கள் 31,  சுயநிதி கல்லூரிகளில் உள்ள முதுநிலை பல் மருத்துவ இடங்களாக 296,  தேசிய வாரிய பட்டப்படிப்பு இடங்கள் 94 என மொத்தம் 2,346 இடங்கள் உள்ளன.  இந்த இடங்களானது 23 அரசு கல்லூரிகளிலும், 16 சுயநிதி கல்லூரிகளிலும் இருக்கின்றன.  முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான அரசு கல்லூரிகளுக்கு  6,968  மற்றும்  நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக விண்ணப்பங்கள் 2,925 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன .

கலந்தாய்வு

இதில், அரசு கல்லூரிகளுக்கு  6,893 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில்   286 விண்ணப்பங்களும்  தகுதி வாய்ந்தவையாக உள்ளன..  பல் மருத்துவ படிப்பிற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு,  அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியானவையாகவும்,  நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாகவும் உள்ளன. இந்த இடங்களுக்கான  கலந்தாய்வு நாளை தொடங்கி 6ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும். ஏற்கனவே மருத்துவ  இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பம் இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது. அக் 3ம் தேதிக்கு பிறகு அதற்கான  கலந்தாய்வு நடைபெறும்.” என்று தெரிவித்தார்.