"ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக" - ஜி.கே. வாசன்

 
gk

ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுக்க வேண்டும் என்று எம்.பி.ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு , ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் . அதாவது ரேஷன் கடை பணியாளர்கள் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு , நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை , பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

ration shop

 குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று முன் தினம் 7 ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் இன்று 9 ஆம் தேதி 3 ஆவது நாளாக தொடர்கிறது . இதனால் பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கிடைக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது , கால தாமதமும் ஏற்படுகிறது . இதனால் ரேஷன் பொருட்களை நம்பியிருக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் . இந்நிலை தொடரக்கூடாது .

tn govt

 எனவே அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் , நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் , புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்க வேண்டும் . விடுமுறை நாள்களில் நகர்வுப் பணியை நிறுத்த வேண்டும் , பொட்டல முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் தமிழக அரசு உடனடியாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் . அப்போது தான் அவர்கள் தொடர்ந்து நடத்த இருக்கும் காத்திருப்பு போராட்டமும் , வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெறாமல் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு பொது மக்களுக்கான ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் . 

ration

அதே சமயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டு , No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய சுற்றறிக்கை அனுப்பியதும் நியாயமில்லை . இதனையும் திரும்பப் பெற வேண்டும் .  எனவே தமிழக அரசு , வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது உள்ளிட்ட வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது .  மேலும் தமிழக அரசு ரேஷன் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்து , அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து , மக்களுக்கான பணியில் தடையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.