11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு..

 
செய்முறைத் தேர்வு


தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.  
 
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 10, 11  மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது, அதன்படி   12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி-  28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும்,  10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும்  தேர்வுகள் நடைபெறுகின்றன.  

மாணவர்கள் தேர்வு

அத்துடன்  10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதி தேர்வு முடிவுகள்  வெளியாகும். 12ஆம் வகுப்புக்கு  தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு  தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும்  வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25( நாளை மறுநாள் ) முதல் மே 2 ஆம் தேதி வரை செய்முறைத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அத்துடன் மே 4 ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.  

செய்முறைத் தேர்வு

இந்நிலையில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 3 மணி நேரமாக இருந்த செய்முறைத் தேர்வுக்கான நேரத்தில் ஒரு மணி நேரத்தை  குறைத்து   மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  இனி செய்றைத் தேர்வுகள் 2 மணி நேரம் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.