விஜயகாந்தின் காலில் உள்ள 3 விரல்கள் அகற்றம் : மருத்துவமனையில் தொடர் சிகிச்சை..

 
விஜயகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்திற்கு, அறுவை சிகிச்சை மூலம்  காலில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.  

சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த விஜயகாந்த், கடந்த 2015 ஆம் ஆண்டுடன்  நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.   அதற்கும் முன்னதாகவே  அரசியலில் களமிறங்கி,  தமிழக அரசியலில்  தேமுதிகவை  3 வது பெரிய கட்சியாக வளர்த்தெடுத்தார்.  பின்னர் உடல்நலக்குறைவு  காரணமாக மெல்ல கட்சிப் பணிகளில் இருந்து விலக ஆரம்பித்தார். அதன்பிறகு தேமுதிகவை , அவரது குடும்ப உறுப்பினர்களே கவனித்து வருகின்றனர். ஆனாலும்,  விஜயகாந்த்  கையில் தேமுதிக இருந்தபோது அக்கட்சிக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை என்றே கூறலாம்..  

பட்ஜெட்டில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது- இளைஞர்களுக்காக கர்ஜித்த விஜயகாந்த்

அத்துடன்  கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.  கம்பீரமான தோற்றத்துடன் எப்போதும் காண்டப்பட்ட அவர் , அண்மையில் வெளியான ஒரு புகைப்படத்தில் மெலிந்த உடல் வாகுடன் காணப்பட்டது அவரது  ரசிகர்களையும், தொண்டர்களையும் கவலையடையச் செய்தது.  அவ்வப்போது கேப்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுவதும், ஓரிரு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புவதும் ஊடகங்களில் செய்திகளாக வெளிவரும்.   அந்தவகையில்  கடந்த ஜுன் 14ம் தேதி விஜயகாந்த்,  வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.  

விஜயகாந்த்

இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக  விரல்களை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.  அதன்பேரில் நேற்று இரவு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வலது  காலில் உள்ள கட்டைவிரல் உள்ளிட்ட  3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது.   அறுவை சிகிச்சை காரணமாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், தற்போது அவர் நலமாக  இருப்பதாகவும்  கூறப்படுகிறது.   அவர் விரைவில்  பூரண நலம்பெற்று வீடு  திரும்ப வேண்டும் என தொண்டர்களும், ரசிகர்களும்   பிரார்த்தனை செய்து வருகின்றனர்.