தமிழகத்தில் எலிபேஸ்ட், சாணி பவுடர் விற்க விரைவில் தடை ..
தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட், சாணி பவுடர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தற்கொலை எண்ணிகையை அதிகரித்து வருகிறது. அதில் பெரும்பாலானோர் எலி பேஸ்ட் , சாணி பவுடர் போன்றவற்றை அதிக அளவு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. எலி பேஸ்டை சாப்பிட்டால் அது உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தில் கலப்பதால், கல்லீரல் முழுவதுமாக செயல் இழந்து ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய் விடுகிறது. ரத்தம் உறையா நிலை ஏற்படுவதால் மூளை மற்றும் நுரையீரலில் உள்ளுக்குள்ளையே ரத்தம் கசிய ஆரம்பித்து இறப்பு நேர்கிறது. இதேபோல் அபாயகரமான ரசாயண பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் சாணி பவுடரும் உயிரை குடிக்கக் கூடியது. தற்கொலை முடிவை எடுக்கும் பலரும் இதுபோன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதால், இதன் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டே அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் தற்கொலைகளால் 15 முதல் 16 ஆயிரம் வரையிலான மரணங்கள் ஏற்படுவதாகவும், விபத்து மரணங்களை விட தற்கொலை மரணங்கள் தான் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்பவர்களில் 10 முதல் 15 சதவீதத்தினர் தூக்கு போட்டு செய்து கொள்வதாகவும், மற்றவர்கள் சாண பவுடர், பால் டாயில், எலி மருந்து ஆகியவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதார துறையின் மூலம் கட்டப்பட்ட 29 துணை சுகாதார நிலைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் எலி பேஸ்ட், சாணி பவுடர் போன்றவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். விற்பனை செய்யும் கடைகளில் இதை டிஸ்ப்ளே செய்யக்கூடாது என்றும், தனிநபர்களுக்கு எலி பேஸ்ட், சாணி பவுடர்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், கூட்டமாக வந்தால் மட்டுமே அதனை விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.