தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்ததற்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

 
tn

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

tn

தஞ்சை மாவட்டம் களிமேடு அப்பர்  ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்பவனி நடைபெறுவது வழக்கம் . 94வது ஆண்டான நேற்று இரவு 10 மணி அளவில் மடத்திலிருந்து தேர்பவனி கிளம்பியது.  அதிகாலை 3 மணி அளவில் அப்பர் மடத்திலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வளைவில் தேர் திரும்பியபோது,  ஜெனரேட்டர் சக்கரத்தில் சிக்கியதாக தெரிகிறது.  இதனால் பின்னோக்கி தேரை இழுத்த போது உயர் மின் அழுத்த கம்பியில் தேரின் மேல் பகுதியை உரசியது. இதில் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் தேங்கி இருந்த நீரில் மின்சாரம் பாய்ந்து 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

stalin

இந்நிலையில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பேசியபோது,   தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று (27- 4- 2022) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராத விதமாக, தேர், மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்து விட்டனர்என்ற நெஞ்சை உலுக்கும் செய்தியினை இப்பேரவைக்கு மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சாவூர் மாவட்டம், மேலவெளி கிராமத்திற்கு உட்பட்ட களிமேடு அப்பர் திருக்கோயிலில் கடந்த 26- 4- 2022 அன்று நடைபெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் 94 ஆம் ஆண்டு சித்திரை சதய விழாவின் தொடர்ச்சியாக நடைபெற்ற தேர் பவனி வீதி உலாவின்போது, இன்று அதிகாலை 3- 10 மணி அளவில் தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட்டம் முடிந்து, தேரினைத் திருப்ப முற்பட்டபொழுது, தேர் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதாகத் தெரிகிறது.

stalin

அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் சம்பவ இடத்திலேயே மோகன், பிரபாத், ராகவன், அன்பழகன், நாகராஜ், சந்தோஷ், செல்வம், ராஜ்குமார், சாமிநாதன், கோவிந்தராஜ், பரணி ஆகிய 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் காயமடைந்துள்ள 16 பேர்களும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிப்பதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்திடவும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் மக்கள் பிரதிநிதிகளும், அரசு உயர் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

stalin

விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று நான் நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களைச் சந்திக்கவும் இருக்கிறேன் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில், பேரவையில் பின்வரும் இரங்கல் தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு பேரவைத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தீர்மானம் :-  மிகுந்த துயரமான இச்சம்பத்தில் உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன் என்று உரையாற்றினார்.  இதையடுத்து சபாநாயகர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த நிலையில் ,அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.