"பெரியார் திடல் இந்தியாவிற்கே சமூக நீதிக்கான இடம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார்  திடலில் நடைபெற்ற “பெரியார் உலகம்” அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17- ஆம் நாளை, சமூகநீதி நாளாக நான் அறிவித்து, அந்த நாளில் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறேன். இது பெரியாருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று மட்டும் நீங்கள் கருத வேண்டாம் - இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை! இந்த நாட்டுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை!

tn

அதேபோல் பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடவும் இருக்கிறோம் என்பதை நான் அன்றைக்கு அறிவித்திருக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாருடைய சிந்தனைகளைத் தேடித் தேடி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தந்தை பெரியார் அவர்கள், உலகத்தலைவர் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல - உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “பெரியார் உலகம்” என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ttn

இதன் மூலமாக பெரியாருக்கு இணையான புகழை நம்முடைய ஆசிரியர் அவர்களும் நிச்சயமாக பெறுகிறார்கள், அதில் எந்த சந்தேகமும் கிடையாது. பத்து வயதில் பெரியாரின் தொண்டராக இணைந்து, இந்த 90 வயதிலும் இளைஞராகவே தொண்டாற்றி, அப்படி தொண்டாற்றுகிற ஆசிரியரைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பொறாமையாகக் கூட இருக்கிறது. இத்தகைய சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டீர்களென்றால், அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், 10 வயதிலேயே பகுத்தறிவின் பால் அருந்தியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள், அதனால்தான் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று அண்ணா அவர்கள் அப்போதே சொல்லியிருக்கிறார். அதனால்தான் 90 வயதைத் தொடும்போது கூட அவர் உற்சாகமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

ttn

'வீரமணி என்றால் வெற்றி மணி' என்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார். 'நாங்கள் செல்லும் பாதை பெரியார் திடல் பாதை தான்'. இதை நான் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.60 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக இருந்து நமக்கெல்லாம் நாளும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார் நம்முடைய மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள். அத்தகைய திசைவழியே திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக ஆக்கும் பணியை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும் உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிச்சயமாக செய்யும்.இதுவே தந்தை பெரியாரின் 144 - ஆவது பிறந்தநாளில், நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதிமொழி!அந்த உறுதிமொழியுடன் நம்முடைய கடமை ஆற்றுவோம்! உறுதிமொழி எடுக்க நான் கோட்டைக்குச் செல்கிறேன்" என்று குறிப்பிட்டார்.