அதிமுக இரட்டை தலைமைக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம்..
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ பன்னீர்செல்வம்- பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ரிமோட் வழக்கு பதிவு இயந்திரம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் விளக்கம் அளிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் பல்வேறு கடிதங்களை அனுப்பி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 16ஆம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு செய்முறை விளக்கம் தருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, தேமுதிக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி வருகிறது. அந்தவகையில் நேற்று அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் , ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம் , பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுக-வுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் முகவரியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிமுகவில் பொதுக்குழுவிற்கு பின்னர்ப்இடைக்கால பொதுச்செயலாளர் பதவி ஏற்கபட்டு இருப்பதாகவும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பாஜக மேலிடத்தின் ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் பார்த்தால், தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.