தஞ்சை மாணவி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு.. மாணவியின் தந்தை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவுக்கு, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க கோரி மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி ஜன.19 ஆம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விடுது வார்டன் தொல்லை கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்றாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் மதம் மாறச் சொல்லிய கட்டாயப்படுத்தியதே தற்கொலைக்கு காரணம் என சர்ச்சை எழுந்திருக்கிறது. மதமாற்றம் குறித்தும், விடுதி வார்டன் தொல்லை குறித்தும் மாணவி லாவண்யா பேசுவது போன்று வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்த வில்லை என்றும், இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. ஆனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தஞ்சையின் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை வேலுவிடம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை ஏற்று மாணவி தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுதமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர், மனுதாரர் சிபிசிஐடி விசாரணை கேட்டிருந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தனர். தமிழக அரசின் வாதங்களை கேட்காமல் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் வாதிடப்பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதி, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு, மாணவியின் தந்தை 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும்,அது வரை சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்டு தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில், மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.