பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே சௌதாமணி கைது - அண்ணாமலை கண்டனம்

 
Annamalai

பாஜகவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் சௌதாமணியை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.  இந்நிலையில் சௌதாமணியின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:,  சமூக ஊடகத்தில் யாரோ வெளியிட்ட பதிவை சௌதாமணி மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் விதமாக வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக உலா வந்துகொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் 8 கோடி இந்து மக்கள் வணங்கும் தெய்வங்களை, சமூக ஊடகங்கள் மூலம் கேலி கிண்டல் செய்து கொச்சைப்படுத்தி பதிவுகள் போடுவது இன்று வாடிக்கையாகிவிட்டது.

annamalai

ஏற்கனவே கருப்பர் கூட்டம் மூலம் தமிழ் கடவுள் முருகனை , கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தினார்கள். சமீபத்தில் யு டு புரூட்டஸ் என்ற சேனலில் தில்லை நடராஜர் நடனமாடும் கோலத்தை தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளனர்.  இவர்கள் மீதெல்லாம் பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுத்தும் இதுவரை திமுக அரசும் காவல்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் சௌதாமணி மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு தகுந்த விளக்கம் கொடுத்த பிறகும் அவர் பாஜகவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். காழ்புணர்ச்சியோடு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ள திமுக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.