மத்திய அரசு இந்தி திணிப்பு செய்தால் தமிழக பாஜக எதிர்க்கும் - அண்ணாமலை அதிரடி

 
Annamalai

இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை எனவும், மத்திய அரசு இந்தி திணிப்பு செய்தால் தமிழக பாஜக அதனை எதிர்க்கும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

புதிய கல்விக்கொள்கை மூலம் மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயன்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்பினார். அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை. இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜக எதிர்க்கும். யார் இந்து, யார் இந்து இல்லை என்று கண்டுபிடிப்பது தான் தற்போது ஃபேஷன் ஆக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. காங்கிரஸ் இந்தி மொழியை திணித்த போது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. மத்திய அரசு 3 மொழியை படிக்க வேண்டும் வேண்டும் என சொல்லி வருகின்றது. இந்தி கற்பதில் தமிழகம் "சி" நிலையில் உள்ளது. இவ்வாறு கூறினார்.