இந்தியா உலகத்திற்கே தலைமை ஏற்கும் நிலை வரும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

 
rn ravi

இந்தியா  உலகத்திற்கு தலைமை ஏற்கும் நிலை விரைவில் வரும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:  இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. கல்வியிலும் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது சிறந்த தலைமையின் கீழ் நாம் செயல்படுகிறோம். அதன் பயனாக பல நல்ல திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளன.முன்பை விட நம் நாட்டுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகள் வரிசையில் நம் நாடு சிறப்பாக இல்லை. ஆனால், இப்போது அனைத்து நாடுகளும் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன.

உலகில் சிறந்த மூன்றாவது நாடாக நம் நாடு உள்ளது. இதற்கு காரணம் மிகச் சிறந்த தலைமையே. கொரோனா காலத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது.இன்று பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடாக உள்ளது. உலகத்திற்கு இந்தியா விரைவில் தலைமை ஏற்கும் நிலை வரும். நாடு வளர்ந்தால் நாம் வளர முடியும். அயல் நாடுகளுக்கு சென்று 'இந்தியன்' என்று சொல்லும் போது, இதன் மதிப்பை உணர முடியும்.வரும், 2047ல், நம் நாடு சுதந்திரம் பெற்ற நுாற்றாண்டை நிறைவு செய்யும் நேரத்தில், முற்றிலும் முன்னேறிய நாடாக இருக்கும். மற்ற நாடுகளில் இல்லாத அளவிற்கு கலாசாரத்தை நம் நாடு கொண்டுள்ளது. ஆன்மிகத்திலும் சிறந்த நாடு நம் நாடு மட்டுமே. எனவே கலாசாரத்தை போற்றுவோம். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.