காசியும், காஞ்சிபுரமும் சிவபெருமானின் இரு கண்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

 
rn ravi

காசியும், காஞ்சிபுரமும் சிவபெருமானின் இரு கண்கள் என்றும், வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.  

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அடுத்த மாதம் 17ம் தேதி முதல்  ஒரு மாதத்திற்கு காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள உறவு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகின்றன. இந்நிலையில் இந்த விழா குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாவது: காசியும், காஞ்சிபுரமும் சிவபெருமானின் இரு கண்கள் என்று புராணம் கூறுகிறது. வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற தமிழ் இதிகாசங்களில் இந்த இணைப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ravi

அறிவியல், தொழில்நுட்பம், வானியல் போன்ற ஆய்வுகளின் சிறந்த மையங்களாக காசியும் காஞ்சிபுரமும் இருந்ததால் அது குறித்து விவாதிக்கப்படுகின்றன. காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் மோடி போன்ற ஒரு துணிச்சலான தலைவரின் துணிச்சலான பரிசோதனை முயற்சியாகும். இந்த நிகழ்வுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காசி-தமிழ்ச் சங்கமத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். நமது நாட்டின் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை நமது நாட்டு மக்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நிலை முரண்பாடானது, துரதிஷ்டவசமானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்