மக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma subramanian

மக்கள் பாதிக்கப்படாத வகையில் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:   'வருமுன் காப்போம் திட்டம்' என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த திட்டம். 2011க்கு பிறகு இந்தத் திட்டம் செயல்பாட்டில் இல்லை. தற்போது மீண்டும் 'கலைஞர் வருமுன் காப்போம் திட்டம்' என்று நடைமுறைக்கு கொண்டு வந்த சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ma subramanian

இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் ஆயிரம் முகாமில் இருந்து 1250 முகாம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஆயிரம் முகாம் நடத்த மட்டுமே திட்டமிட்டு இருந்தது தற்போது வரை 1035 முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மூலம் 7.38 லட்சம் நபர்கள் பயனடைந்து உள்ளனர். சென்னையில் ஒரு மண்டலத்துக்கு ஒரு முகாம் என 15 முகாம் ஒதுக்கப்பட்டது. தற்போது வரை 14 மருத்துவ முகாம்கள் நடைபெற்று தற்போது 15வது முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஆயிரம் மேற்பட்ட நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

bus

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா தொற்று சற்று அதிகமாக உள்ளது. குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பேருந்துகள் குறைவான அளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவு. மக்கள் பாதிக்கப்படாத வகையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.