சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்திந்த்த அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் வரலாறு காணத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் முதலமைச்சர் வழிகாட்டுதல்களோடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது எனவும் கூறினார். சட்டமன்றத்தில் அறிவுத்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றதாகவும் கூறினார்.
கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த போது அவர்கள் ஏற்கவில்லை எனவும், திமுக அரசு பொறுப்பேற்றதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார். மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.