நாளை பள்ளிகள் திறப்பு: இதை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட்..
Jun 12, 2022, 11:49 IST1655014773767
பள்ளி அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு பள்ளி திறக்கும் நேரத்தை தலைமை ஆசிரியர்களை முடிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர், நாளை 1 - 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
- அதில், “ உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே வர வேண்டும். மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை அவர்கள் கண்காணிக்க வேண்டும்.
- ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்துக்கு இரண்டு பாடவேளைகள் உடற்பயிற்சி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. வாரத்தில் ஒரு நாளில் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
- தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் முன்பு காலை வணக்கக் கூட்டம் நடத்த வேண்டும். இதில் மாணவர்கள் தவறாமல் கலந்துகொண்ட செய்ய வேண்டும்.
- மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு, 20 நிமிடம் மாணவர்களை சிறார் பருவ இதழ், செய்தித்தாள், நூலகங்களில் நூல்களை வாசிக்க செய்ய வேண்டும்.
- வாரத்திற்கு ஒருநாள் அனுபவப்பகிர்வு, நீதி போதனை பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் இதற்கு பொறுப்பேற்று மாணவர்களுக்கு மன நலன் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவார்.
- ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதே நாளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துவதற்கு முன்பு பெற்றோர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அப்போது ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் அவர்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து சொல்ல வேண்டும்.
- 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 9.10 மணி முதல் மாலை 4 மணி வரை என 7 மணி நேரம் வகுப்புகள் நடத்தலாம். இதில் முதல் 20 நிமிடம் காலை வணக்கம் கூட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- அதேபோல் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 7 மணி நேரம் 10 நிமிடம் வகுப்புகள் நடத்தலாம். இவர்களுக்கு முதல் 30 நிமிடம் காலை வணக்கக் கூட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- ஒரு நாளைக்கு 8 பாடவேளைகள் என்கிற அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும். திட்டமிடலுக்கான பாடவேளை நேரமாகவே கொடுக்கப்படுகிறது.
- பள்ளிகள் அமைவிடம் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவுடன் கலந்தாலோசித்து வகுப்புகள் தொடங்கும் மற்றும் முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான, நாளையே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.