550 கோயில்களில் இணையவழி மற்றும் கணிணிவழி வாயிலாக கட்டணச் சேவைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்

 
Kovil news Kovil news

தமிழகத்தில் 550 திருக்கோயில்களில் இணையவழி மற்றும் கணிணிவழி வாயிலாக கட்டண சேவைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்  550 திருக்கோயில்களில் இணைய வழி மூலம் 255  கட்டணச் சேவைகள் வழங்கும் திட்டத்தை அத்துறையின் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருக்கோயில்களின் சொத்துக்களில் இருந்து பெறப்படும் குத்தகை , வாடகை தொகைகளுக்கு திருக்கோயில்களில் அளிக்கப்பட்டு வந்த ரசீது  முறை ரத்து செய்யப்பட்டு அதற்குண்டான ரசீதுகள் இணையவழி மூலமாகவும் கணினிவழி மூலமாக பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

sekar babu

அதன் தொடர்ச்சியாக  திருக்கோவில் உள்ள கட்டணச் சேவைகள் அனைத்தும் இணையவழியில்  முன்பதிவு செய்து கொள்ளவும் திருக்கோவில் கட்டணச் சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் வசதிகள் பெறுவதற்கு அறநிலைத்துறை இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக அதிக பக்தர்கள் வருகை தரும் 550 முக்கிய திருக்கோயில்களில் அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம்,
திருமண கட்டணம், பரிகாரக் கட்டணம், சனிபெயர்ச்சி கட்டணம் மற்றும்  குருபெயர்ச்சி கட்டணம் உள்ளிட்ட 255 வகையான சேவைகள் இணையவழி மூலம் முன்பதிவாகவும் திருக்கோயில் கட்டண சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் வழங்கப்படும். இவ்வாறு இணையவழியிலும் திருக்கோயில்களில் கணினி மூலம் ரசிதுகளில் கியூ.ஆர்.கோடு எனப்படும் விரைவு பரிசோதனை குறியீடுகள்  இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை கட்டணம் ரசீது பெறுவது தொடர்பாக குறைபாடுகள் இருப்பின் அதனை ஆணையர் அலுவலக உதவி மைய தொலைபேசி 04428339999 எண்ணிற்கு தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.