2ம் கட்ட திருப்புதல் தேர்வு.. வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க தமிழக அரசு அசத்தல் திட்டம்...

 
மாணவர்கள் தேர்வு

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் “லீக்” ஆகாமல் தடுக்க,  3வகை வினாத்தாள்கள் தயாரிக்க பள்ளிக் கல்விதுறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. பின்னர் பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, 1 முதம் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனால் கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல் கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வும்  நடத்தப்பட்டன.

வினாத்தாள் கசிவு

ஆனால்   வினாத்தாள்கள்  தேர்வுக்கு முன்னதாகவே  சமூக வலைதளங்களில் வெளியானது. முதலில் திருவண்ணாமலை,  அடுத்து சென்னை என அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு பாடங்களுக்கான வினாத்தாள் “லீக்” ஆனது.  இந்த விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கமும்   செய்யப்பட்டார்.

இந்நிலையில்  10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  2-ம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 முடிவடைய  இருக்கிறது. இந்தத்த்தேர்வில் வினாத்தாள்கள்  வெளியாகாமல்  தடுக்க பள்ளிக்கல்விதுறை புதிய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

வினாத்தாள் கசிவு- பள்ளிக்கல்வித்துறை

அதாவது  3 விதமான வினாத்தாள்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 3 விதமன வினாத்தாள்களை தயாரித்து  கடைசி நேரத்தில் எந்த வினாத்தாளை வழங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவிக்க முடிவு செய்துள்ளது. அதேநேரம்  ஒருவேளை ஒரு வினாத்தாள் லீக் ஆனாலும்,  மாற்று வினாத்தாளை தேர்வில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால்  3 வகை வினாத்தாள்களும் ஒரே நேரத்தில் வெளியாகிவிடாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.