கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

 
TTV

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஐநா சபையால் முன்னெடுக்கப்பட்டது. ”அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தீர்வுகள், அணுகக்கூடிய மற்றும் சமமான உலகத்தைப் படைப்பதில் புதுமையின் பங்கு” என்பதே இந்தாண்டுக்கான கருப்பொருள். இதனிடையே சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இல்லாமல், சமூகத்தின் வளர்ச்சி முழுமை அடையாது என்பதை புரிந்துகொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்கிடவும், உயர்வுகளை ஏற்படுத்தித் தந்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்றிடுவோம். வாழ்வின் தடைகள் அனைத்தையும் தகர்த்து, உலகம் போற்றுகிற சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் ஒளிர்ந்திட இறையருளிடம் வேண்டுகிறேன்.  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.