தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்வர்களுக்கு மீண்டும் தேர்வு ? திமுக அரசின் அநீதி என்று தினகரன் கண்டனம்!!
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலை வழங்காமல் உள்ள திமுக அரசுக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம் தகுதித் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் பணிகளுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஒருவர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவராவார். ஏற்கனவே தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு இன்னும் பணிகள் வழங்கப்படாமல் உள்ள சூழலில், தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் உள்ள நிலையில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழக அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி வேலை வழங்காமல் ஏமாற்ற நினைக்கும் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வேலை வாய்ப்பக முன்னுரிமையையும் (Employment Seniority) பின்பற்றாமல், தகுதித்தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றதையும் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தேர்வு எழுதவேண்டுமென அரசாணை பிறப்பித்திருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அவர்களை இப்படி நம்பவைத்து கழுத்தறுப்பது சரியானதல்ல. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பல்வேறு நிலை ஆசிரியர் பணியிடங்களில் அவர்களை பணி அமர்த்தவேண்டும். தி.மு.க அரசின் வஞ்சகத்தைக் கண்டித்து தொடர்ந்து நடந்துவரும் ஆசிரியர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.