தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் காலமானார்

 
ilamaran

தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை உயிரிழந்த நிலையில், பலரும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆசிரியர் பி.கே.இளமாறன்.  கொடுங்கையூர் அரசுப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பி.கே.இளமாறன் பணியாற்றி வந்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரான பி.கே. இளமாறன் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம், அறிக்கைகள் வெளியிடுவது உள்ளிட்டவற்றை முன்னெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

சென்னை வியாசர்பாடியில் உள்ள இல்லத்தில் ஆசிரியர் இளமாறன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இளமாறன் அவர்களின் மறைவு காரணமாக அவரது குடும்பத்தினருக்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இளமாறனின் திடீர் உயரிழப்பு ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.