தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி? கருத்து கணிப்பில் வெளியான தகவல்!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 85 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி பதவியேற்றார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்து விட்டது.
இந்த ஓராண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக் குட்பட்ட ரூ.5,250 கோடி நகைக் கடன்கள் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழில் கல்வி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு, திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்தச் சலுகை, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு அதை நடத்தி காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஐஏஎன்எஸ் மற்றும் சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 85 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினின் செயல்பாடுகள் மிக சிறப்பானதாக இருக்கிறது என்று 40 . 2 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் முதலமைச்சரின் செயல்பாடு குறித்து நடத்திய கருத்துக்கணிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி மீது 35.28 சதவீத மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 41.71 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர்.