ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர் பலிக்கு திமுக அரசே பொறுப்பு - அண்ணாமலை
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு திமுக அரசு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளதாகவும், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று கூறியுள்ளார். அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது. அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தான் பொறுப்பு. இவ்வாறு அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.