தனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயார் - அண்ணாமலை அடுத்த சவால்!

 
Annamalai

தனது வருமானம் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது வருமான, சொத்து விபரங்களை பொதுவெளியில் வெளியிட தயாராக இருப்பதாகவும், தான் வெளியிடும் சொத்து விவரங்களை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால் எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயார் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதா பற்றி தொடர்ந்து பொய்களை பரப்பினார்கள். அதை களை எடுத்து வருகிறோம். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நான் மக்கள் பிரதிநிதி இல்லை. கவுன்சிலராகவோ, ஊராட்சிமன்ற தலைவராகவோ, எம்.பி., எம்.எல்.ஏ.வாகவோ இல்லை. அரசிடம் இருந்து ஒரு ரூபாயை கூட நான் வருமானமாக பெறவில்லை. ஆனாலும் தி.மு.க. என்னிடம் நான் அணியும் வாட்ச் குறித்து கேட்கிறது. இதற்காகத்தான் நான் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன்.நான் போலீஸ் அதிகாரியாக இருந்த போதே ரபேல் போர் விமானம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று நினைத்தவன். பல இடங்களில் பேசியவன். இதன் காரணமாகவே நான் ரபேல் நிறுவன கடிகாரத்தை வாங்கி அணிந்து இருக்கிறேன்.

Annamalai

தி.மு.க. செய்யும் குடும்ப அரசியலை முழுமையாக எதிர்க்கும் நான் எனது முழு குடும்ப சொத்து விபரங்களை வெளியிட போகிறேன். எனது வருமானம் மட்டுமின்றி, அப்பா, அம்மா, மனைவி, உடன் பிறந்தோர் என அனைவரது வங்கி கணக்குகளையும் வெளியிடப்போகிறேன். தி.மு.க.வினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால் நான் அதை எதிர் கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மே மாதம் வாங்கிய எனது ரபேல் வாட்ச் விபரம், வாங்கிய ரசீது, எனது வாழ்நாள் வருமான வரி அனைத்தையும் பொது வெளியில் வெளியிடுகிறேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால் எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயார். அதேபோல் வருமான விபரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களையும் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. தலைவர்கள் பொது வெளியில் வெளியிட தயாரா?. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.