நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டி? - அண்ணாமலை விளக்கம்

 
Annamalai

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடுவாரா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து போட்டியிடவுள்ளதாக கடந்த சில மாதங்களாக வதந்தி பரவி வருகிறது. அதிலும், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர். அவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். நாட்டு மக்கள் அனைவரும் அவர் மீது அன்பும், பாசமும் வைத்துள்ளனர். அது மட்டுமின்றி அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது அவர் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாகவும் வதந்தி பரவியுள்ளது. இது உண்மைதானா? என என்னிடம் பலரும் கேட்கிறார்கள். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் தூத்துக்குடிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு கடையில் டீ குடிக்க சென்றேன். என்னை பார்த்ததும் அங்கிருந்தவர்கள், என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா? என்பது தான். இதனை தெரிந்து கொள்ள அந்த அளவுக்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். பாரதிய ஜனதாவை தமிழகத்தில் வலுவான கட்சியாக மாற்ற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் அன்பு காட்டுகிறார்கள். அவரது செயல்பாடுகளை விரும்புகிறார்கள். தமிழகத்திலும் பிரதமர் மோடி அலை வீசுகிறது. தமிழகத்திலும் பாரதிய ஜனதாவுக்கு தனி அடையாளம் இருக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதனை நாங்கள் நிரூபிப்போம். இவ்வாறு கூறினார்.