சென்னையில் தனியார் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து..
சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அசோக் நகர் 2வது அவென்யூவில் தனியார் மருந்து குடோன் அமைந்துள்ளது. இங்கு மருந்து கடைகளுக்கு வழங்குவதற்கான முகக்கவசம், பஞ்சு, மருந்து மாத்திரைகள் போன்ற மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ முழுவதுமாக கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அசோக் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் நிகழ்வு இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
முதல் கட்ட தகவலின்படி, இந்த மருந்து குடோனின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார் மற்றும் ஒரு சரக்கு வாகனம் என மொத்தம் மூன்று வாகனங்கள் இந்த தீயில் எரிந்து நாசமாகியிருக்கின்றன. குடோனுக்கு வெளியே வாகன நிறுத்துமிடங்களிலும் பஞ்சு, முகக்கவசம் போன்றவை அடுக்கி வைக்கப்பட்டு தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் குடோனுக்கு வெளியேயும் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் இந்த பகுதிக்கும் குடோனுக்கும் ஊழியர்கள் யாருமே வரவில்லை. இந்தச் சூழலில் பட்டாசு வெடித்து அது வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சின் மீது பட்டு தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவு போன்ற வேறு ஏதும் காரணங்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .
வெளிப்புறத்தில் இருந்து தொடர்ந்து விட்டு எரிந்து வருவதால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். வேறு எந்த வழியிலும் கட்டிடத்திற்கு உள்ளே செல்ல முடியாத சூழல் இருந்து வருகிறது. கட்டிடத்தின் முன்பக்கம் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ள நிலையில், முன்பக்க கதவை உடைத்து உள்ளே செல்லும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். குடோனுக்கு உள்ளே இருந்த பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகியிருப்பதாக கூறப்படுகிறது. முழுவதுமாக இந்த தீ அணைக்கப்பட்ட பின்னரே எவ்வளவு ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியிருக்கிறது என்பது தெரியவரும். விடுமுறை நாள் என்பதால் குடோனில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.